Archives: ஜனவரி 2022

தயக்கமில்லா கண்ணீர்

“என்னை மன்னிக்கவும்,” சீமா தன் கண்ணீருக்காக மன்னிப்புக் கேட்டார். அவருடைய கணவர் இறந்த பிறகு, தன்னுடைய பதின்ம வயது குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பை அவர் ஏற்க நேர்ந்தது. அவருடைய திருச்சபை, அவருடைய சுமையை குறைக்கும் விதத்தில் ஒரு வாரயிறுதி உல்லாச முகாமுக்கு அவர்களை அழைத்து மகிழ்ச்சிபடுத்தியது. அந்த மகிழ்ச்சி பெருமிதத்தில் கண்ணீர் சிந்திய சீமா, தன்னுடைய கண்ணீருக்காக மன்னிப்புக் கோரினாள்.

நாம் ஏன் கண்ணீருக்காக மன்னிப்புக் கேட்கிறோம்? சீமோன் என்னும் ஒரு பரிசேயன் இயேசுவை விருந்துக்கு அழைக்கிறான். உணவின் இடையிலே ஒரு பாவியாகிய பெண் தன்னோடு பரிமளதைலத்தைக் கொண்டுவருகிறாள். “அவருடைய பாதங்களின் அருகே பின்னாக நின்று அழுதுகொண்டு, அவருடைய  பாதங்களைத் தன் கண்ணீரினால் நனைத்து, தன் தலைமயிரினால் துடைத்து, அவருடைய பாதங்களை முத்தஞ்செய்து, பரிமளதைலத்தைப் பூசினாள்” (லூக்கா 7:38). சற்றும் தயக்கமின்றி இந்த ஸ்திரீ, வெளிப்படையாக தன்னுடைய அன்பை பிரதிபலிக்க தன் தலைமயிரினால் இயேசுவின் பாதத்தைத் துடைத்தாள். நன்றி பெருக்காலும், அன்பாலும் அவள் கண்ணீரின் மேலே பரிமள தைலத்துடன் முத்தங்களை பரிசாக்கினாள். அவளுடைய இந்த செய்கை இந்த விருந்தை ஆயத்தப்படுத்திய இரக்கமற்ற பரிசேயனின் எதிர்பார்ப்பிற்கு மாறாக இருந்தது.

அவனுக்கு இயேசுவின் பதில்? அவர் அவளின் உற்சாகமான அன்பின் வெளிப்பாட்டை புகழ்ந்து, அவளின் அநேக பாவங்கள் “மன்னிக்கப்பட்டது” (வச. 44-48) என்று அறிவித்தார்.

நன்றியுணர்வினால் கண்ணீர் பெருக்கெடுக்கும்போது, அந்த கண்ணீரை நாம் அடக்கிவைக்க முற்படுகிறோம். ஆனால் தேவன் நம்மை உணர்ச்சி மிகுந்தவர்களாகவே படைத்துள்ளார். நாம் அவரை நம் உணர்வுகள் மூலம் கனப்படுத்துகிறோம். லூக்கா நற்செய்தியில் வரும் பெண்ணைப்  போல நாமும் நமது நல்ல தேவனிடம் நம் அன்பை தயக்கமின்றி வெளிப்படுத்துவோம். தேவன் நம் தேவைகளை எல்லாம் சந்திக்கிறார். அவர் நம் நன்றியின் பதில்களையும் சுதந்திரமாக ஏற்றுக்கொள்ளுகிறார்.

பதில் கிடைக்காத ஜெபங்கள்

நாம் அடைந்து விட்டோமா? இன்னும் இல்லை. நாம் அடைந்து விட்டோமா? இன்னும் இல்லை. எங்கள் பிள்ளைகள் சிறுவர்களாய் இருந்தபோது, வீட்டை அடையும் 16 மணி நேர பயணத்தில் நாங்கள் இப்படித்தான் கேட்டுக்கொண்டே விளையாடிக்கொண்டு வந்தோம். எங்களின் மூத்த பிள்ளைகள் இருவரும் இந்த விளையாட்டை துடிப்புடன் விளையாடினர். அவர்கள் அந்த கேள்விகளை பலமுறை கேட்டுக்கொண்டேயிருந்தனர். நாம் அடைந்து விட்டோமா? என்ற இந்தக் கேள்வியை என்னுடைய குழந்தைகள் மிகுந்த ஆர்வத்துடன் கேட்பர். நானும் வாகனத்தை ஓட்டிக்கொண்டே “இல்லை” என்று அதே ஆர்வத்துடன் பதிலளிப்பேன். நாங்கள் இன்னும் வந்து சேரவில்லை, ஆனால் சீக்கிரத்தில் சேர்ந்துவிடுவோம் என்பதே பதில். 

உண்மை என்னவெனில், பெரியவர்கள் அந்த கேள்வியை சத்தமாய் சொல்லவில்லை என்றாலும் அந்த கேள்வியில் வேறு ஒரு மாற்று முறையை விரும்புகின்றனர். ஆனால் நாம் அதே காரணத்திற்காகத் தான் கேட்கிறோம். நாம் சோர்ந்துவிட்டோம், நம் கண்கள் குழிவிழுந்து போயிற்று (சங்கீதம் 6:7). ஒவ்வொரு நாளும் ஏற்படுகிற வாழ்க்கை பிரச்சனைகள், வேலை ஸ்தலத்தில் ஏற்படும் முடிவில்லா சோதனைகள், உடல் ஆரோக்கியம் மற்றும் உறவு ரீதியான பிரச்சனைகள் ஆகியவற்றால் நாம் பெருமூச்சி விட்டு இளைத்துப் போகிறோம் (வச. 6). நாம் அடைந்து விட்டோமா? இந்த பாடுகள் எது வரைக்கும் தேவனே? என்று நாம் கதறுகிறோம்.   

அந்த வகையான சோர்வை சங்கீதகாரன் நன்கு அறிந்து தேவனிடம் முக்கியமான கேள்வியை கேட்கிறார். அக்கறையுள்ள பெற்றோர் போல, தாவீதின் அழுகுரலைக் கேட்டு மிகுந்த இரக்கத்தால் ஏற்றுக்கொண்டார் (வச. 9). நாம் தேவனிடம் கேட்பதற்கு வெட்கப்படத் தேவையில்லை. கர்த்தருடைய சமுகத்தில், “எதுவரைக்கும் தேவனே?” என்று தைரியமாகக் கேட்கலாம். அவரோ “இன்னும் இல்லை, ஆனால் சீக்கிரத்தில் நடக்கும். நான் நல்ல தேவன், என்னை நம்புங்கள்" என்பார்.

கிறிஸ்துவைப் போல பரிபூரணராய்

காத்லீன் நாரிஸ் என்னும் எழுத்தாளர், “பரிபூரண வாதம் (Perfectionism) என்பது எனக்குத் தெரிந்த வார்த்தைகளிலேயே பயங்கரமான ஒரு வார்த்தை,” என்கிறார். அவர் நவீன காலத்து பரிபூரண வாதத்தையும், மத்தேயுவில் விளக்கியுள்ள பரிபூரணத்திற்கும் உள்ள வித்தியாசத்தை விளக்குகிறார். நவீன காலத்து பரிபூரண வாதம் என்பது ஒரு தீவிர உளவியல் துன்பம். அது மக்களை எந்த ஒரு சவாலையும் துணிச்சலுடன் எதிர்கொள்ளவிடாமல் தடுக்கிறது என்கிறார். ஆனால் மத்தேயுவில் வரும் பூரணம் என்பது “முதிர்ந்த” அல்லது “முழுமையான” என்று பொருள்படுகிறது. “பரிபூரணம் என்பது வளர்ச்சிக்கு இடம் தந்து, முதிர்ச்சியடைந்தவர்களாய் மற்றவர்களுக்கு நம்மையே தருவதாகும்” என்று நாரிஸ் குறிப்பிடுகிறார். 

பரிபூரணம் என்பதை இந்த வழியில் புரிந்துகொள்ள மத்தேயுவில் ஒரு ஆழமான கதை இருக்கிறது. மத்தேயு 19ல் இயேசுவிடம் ஒருவன் வந்து “நித்திய ஜீவனை அடைவதற்கு நான் எந்த நன்மையைச் செய்ய வேண்டும்?” என்று கேட்கிறான் (வச. 16). இயேசு பதிலுக்கு “கற்பனைகளைக் கைக்கொள்” என்கிறார் (வச. 17). இதையெல்லாம் கைகொண்டிருக்கிறேனே இன்னும் என்னிடத்தில் குறைவு என்ன? என்று அந்த மனிதன் கேட்கிறான் (வச. 20). 

அப்பொழுது அந்த மனிதனின் ஐசுவரியம் தான் அவன் மனதைப் பற்றியிருக்கும் பிடி என்பதை இயேசு உணர்ந்துகொண்டார். எனவே இயேசு, “நீ பூரண சற்குணனாயிருக்க விரும்பினால், போய், உனக்கு உண்டானவைகளை விற்று, தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது, பரலோகத்தில் உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்” என்கிறார் (வச. 21). 

நாம் ஒவ்வொருவரும் பரிபூரணத்திற்கு அவரவருக்கு சாதகமான விளக்கத்தை வைத்திருக்கிறோம். நாம் பற்றியிருக்கும் ஆஸ்திகள் அல்லது பழக்கவழக்கங்கள் ஆகியவற்றை கட்டுக்குள் வைக்கும் முயற்சி பயனற்றது. இன்று இயேசுவின் மென்மையான அழைப்பைக் கேட்டு உங்களை ஒப்படையுங்கள், பரிபூரணத்தில் விடுதலையடையுங்கள், அது தேவனால் மட்டுமே கூடும் (வச. 26).

நாம் தேவனை நம்புகிறோம்

வினிதாவுக்கு குழந்தை பிறக்க இன்னும் ஆறு வாரங்கள் இருந்தபோது, கர்ப்பகாலத்தில் ஏற்படக்கூடிய கொலஸ்டாஸிஸ் என்ற கல்லீரல் நோய் பிரச்சினை அவருக்கு இருந்தது கண்டறியப்பட்டது. வினிதாவை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்றனர். அவளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, இன்னும் 24 மணி நேரத்தில் குழந்தை வெளியே வந்துவிடும் என்று மருத்துவர்கள் அறிவித்தனர். அதேவேளையில், மருத்துவமனையின் மறுபக்கத்தில் கோவிட்-19 சிகிச்சைக்கு தேவையான வென்டிலேட்டர் மற்றும் தேவையான உபகரணங்களை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தனர். அதனால் வினிதாவை பராமரிக்கமுடியாமல் வீட்டுக்கு திருப்பி அனுப்பிவிட்டனர். அவள் தேவன் மீதும் அவருடைய திட்டங்கள் மீதும் நம்பிக்கை வைக்க முடிவு செய்தாள். சில நாட்களுக்குப் பிறகு ஓர் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுத்தாள்.

வேதம் நம்மில் வேரூன்றும்போது நாம் சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் வழிகளை அது முற்றிலும் மாற்றுகிறது. எரேமியாவின் நாட்களில், மக்கள் மனிதர்களையும் விக்கிரகங்களையும் நம்பி வாழ்ந்தனர். தீர்க்கதரிசி இருவேறு மனிதர்களைப் பற்றிய வித்தியாசத்தை எடுத்துரைக்கிறார். “மனுஷன் மேல் நம்பிக்கை வைத்து, மாம்சமானதைத் தன் புயபலமாக்கிக் கொண்டு, கர்த்தரை விட்டு விலகுகிற இருதயமுள்ள மனுஷன் சபிக்கப்பட்டவன்” என்று கர்த்தர் சொல்லுகிறார் (எரேமியா 17:5). “கர்த்தர்மேல் நம்பிக்கைவைத்து, கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான். அவன் தண்ணீரண்டையிலே நாட்டப்பட்டதும், கால்வாய் ஓரமாகத்தன் வேர்களை விடுகிறதும், உஷ்ணம் வருகிறதைக் காணாமல் இலை பச்சையாயிருக்கிறதும்... மரத்தைப் போலிருப்பான்” (வச. 7-8). 

நம்முடைய பிரச்சனைகளுக்கான தீர்வுக்காய் நாம் அவரை விசுவாசத்தில் சார்ந்திருக்க அழைக்கப்பட்டிருக்கிறோம். அவர் நமக்குத் தேவையான பெலத்தைத் தருகிறார்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

தூதர் துணை

பரிசோதனைமேல் பரிசோதனை செய்துகொண்டேயிருக்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டபடியால், பினு மிகவும் சோர்வாகவும் பாரமாகவும் கருதினாள். அவளுடைய உடம்பில் ஏதாவது புற்றுநோய் கட்டிகள் இருக்கிறதா என்பதை பரிசோதிப்பதாக மருத்துவர்கள் அவளிடம் தெரிவித்தனர். ஒவ்வொரு நாளும் தேவன் தம்முடைய பிரசன்னத்தின் வாக்குறுதிகளாலும், அவள் ஜெபிக்கும்போது அல்லது வேதத்தைப் படிக்கும்போது ஓர் நித்திய சமாதானத்தையும் கொண்டு அவளை ஊக்கப்படுத்தினார். அவள் நிச்சயமற்ற மனநிலையுடன் போராடினாள். மேலும் தேவனிடத்தில், ஒருவேளை “இப்படியிருந்தால்...” என்று தன்னுடைய பயத்தை அதிகமாய் பகிர ஆரம்பித்தாள். தீவிர அறுவை சிகிச்சைக்கு முன் ஒரு நாள் காலை பினு தன்  கண்ணில்பட்ட யாத்திராகமம் 23ல் ஒரு வசனத்தை வாசித்தாள். அது: “வழியில் உன்னைக் காக்கிறதற்கும்... இதோ, நான் ஒரு தூதனை உனக்கு முன்னே அனுப்புகிறேன்” (வச. 20)

அந்த வார்த்தைகளை தேவன் மோசேயின் மூலம் தம்முடைய மக்களாகிய இஸ்ரவேலருக்குக் கூறினார். தம்முடைய ஜனங்கள் பின்பற்றும்படியாக தேவன் நியாயப்பிரமாணங்களைக் கொடுத்து, அவர்களைப் புதிய தேசத்திற்கு அழைத்துச் சென்றார் (வச. 14-19). ஆனால் அவர்களுடைய பாததையில் அவர்களை பாதுகாப்பதற்காக, “ஒரு தூதனை உனக்கு முன்னே அனுப்புகிறேன்” என்று கூறுகிறார். பினுவின் வாழ்க்கை நிலைமை இதுவாக இல்லாவிட்டாலும், தேவ தூதர்களைக் கொண்டு கர்த்தர் தம்முடைய ஜனத்தை பாதுகாப்பதை மற்ற வேதப்பகுதிகளின் மூலம் அவள் அறிந்தாள். சங்கீதம் 91:11, “உன் வழிகளிலெல்லாம் உன்னைக் காக்கும்படி, உனக்காகத் தம்முடைய தூதர்களுக்குக் கட்டளையிடுவார்” என்று சொல்லுகிறது. மேலும் எபிரெயர் 1:14, “இரட்சிப்பைச் சுதந்தரிக்கப்போகிறவர்களினிமித்தமாக ஊழியஞ்செய்யும்படிக்கு அவர்களெல்லாரும் அனுப்பப்படும் பணிவிடை ஆவிகளாயிருக்கிறார்களல்லவா?” என்று குறிப்பிடுகிறது. 

நாம் கிறிஸ்துவை அறிந்திருந்தால், நமக்கும் ஊழியம் செய்ய ஒரு துதன் அனுப்பப்படுகிறார் என்பதை விசுவாசிப்போம்.

 

கவலைகளை களையெடுக்கவும்

எனது வீட்டு முற்றத்தில் உள்ள ஒரு நடவு இயந்திரத்தின் மூலம் சில விதைகளை விதைத்துவிட்டு, அதன் விளைச்சலைப் பார்க்க காத்திருந்தேன். பத்து முதல் பதினான்கு நாட்களுக்குள் விதைகள் முளைக்கும் என்று அறிந்து, நான் அதற்கு நீர் பாய்ச்சி பராமரித்தேன். விரைவில் சில பச்சை இலைகள் மண்ணிலிருந்து வெளியேறுவதைக் கண்டேன். ஆனால் அவை களைகள் என்று எனது கணவர் என்னிடம் சொன்னபோது நான் பதற்றமடைந்தேன். நான் வளர்க்க முயற்சிக்கும் செடிகளை அவை நெரித்துவிடாதபடி விரைவாக அவைகளை வெளியே இழுக்கும்படி எனது கணவர் என்னை ஊக்குவித்தார்.

நம்முடைய ஆவிக்குரிய வளர்ச்சியைத் தடுக்கக்கூடிய ஊடுருவல்காரர்களைக் கையாள்வதன் முக்கியத்துவத்தையும் இயேசு அறிவிக்கிறார். அவர் தனது உவமையின் ஓர் பகுதியை இவ்வாறு விளக்கினார்: விதைப்பவன் ஒருவன் தன்னுடைய விதைகளை விதைத்தபோது, அவற்றுள் “சில விதை முள்ளுள்ள இடங்களில் விழுந்தது; முள் வளர்ந்து அதை நெருக்கிப்போட்டது” (மத்தேயு 13:7). முட்களும் களைகளும் தாவரங்களின் வளர்ச்சியை வெகுவாய் பாதிக்கக்கூடியவைகள் (வச. 22). அதுபோல கவலைகள் நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். வேதத்தை வாசிப்பதும் ஜெபிப்பதும் நமது விசுவாசத்தை வளர்ப்பதற்கான சிறந்த வழிகள். ஆனால் கவலையின் முட்களைக் களையெடுப்பதில் நான் கவனம்செலுத்தவேண்டும் என்பதை உணர்ந்தேன். அவைகள் என்னுள் விதைக்கப்பட்ட நல்ல வசனத்தை நெருக்கி, தவறாய் என்னை திசைதிருப்பக்கூடும். 

வேதத்தில் காணப்படும் ஆவியின் கனிகளானது, அன்பு, சந்தோஷம், சமாதானம் போன்றவற்றை உள்ளடக்கியது (கலாத்தியர் 5:22). ஆனால் நாம் அந்த பலனைக் கொடுப்பதற்கு, தேவனுடைய வல்லமையோடு நம்மைத் திசைதிருப்பக்கூடிய அல்லது நம்முடைய கவனத்தை மாற்றக்கூடிய சந்தேகம் போன்ற கவலையின் களைகளை புறம்பாக்கிட வேண்டும். 

 

இணைந்து இயேசுவுக்கு ஊழியம் செய்தல்

மைக்ரோனேசியாவில் உள்ள ஓர் தீவில் சிக்கித்தவிக்கும் இரண்டு ஆண்களுக்கு உதவ மீட்புப் பணியாளர்கள் பிரயாசப்பட்டனர். அவர்களுக்கு சுகாதார நெருக்கடி ஏற்படுவதற்கு முன்பு அவர்களை விரைந்து காப்பாற்றுவதற்கு குழுவாய் செயல்படவேண்டியது அவசியமாய் தோன்றியது. அவர்களை முதலில் கண்டுபிடித்த விமானி, அவர்களின் அருகாமையிலிருந்த ஆஸ்திரேலிய கப்பலுக்கு செய்தியனுப்பினார். கப்பல், இரண்டு ஹெலிகாப்டர்களை அனுப்பியது, அவை உணவு, தண்ணீர் மற்றும் மருத்துவ சேவைகளை வழங்கின. பின்னர், அமெரிக்க கடலோர காவல்படை அங்கு வந்து ஆட்களை சரிபார்த்து தகவல் அளித்தனர். இறுதியாக, ஓர் மைக்ரோனேசிய ரோந்துப் படகு அவர்களை பத்திரமாக அழைத்துக்கொண்டு வந்துவிட்டது.

நாம் இணைந்து செயல்பட்டால் நிறைய சாதிக்க முடியும். பிலிப்பிய விசுவாசிகள் அப்போஸ்தலர் பவுலை ஆதரிக்க தங்கள் முயற்சிகளை ஒருங்கிணைத்தனர். லீதியாளும் அவரது குடும்பத்தினரும் அவரை தங்கள் வீட்டிற்குள் வரவேற்றனர் (அப்போஸ்தலர் 16:13-15). கிலேமெந்து, எயோதியாள் மற்றும் சிந்திகேயாள் (இவர்கள் ஒத்துப்போகவில்லை) அனைவரும் நற்செய்தியைப் பரப்புவதற்கு அப்போஸ்தலருடன் நேரடியாக வேலை செய்தனர் (பிலிப்பியர் 4:2-3). பின்னர், பவுல் ரோமில் சிறையில் அடைக்கப்பட்டபோது, தேவாலயம் (விசுவாசிகள்) அவரது பராமரிப்புக்குத் தேவைப்படும் பொருளாதாரத்தை சேகரித்து, எப்பாபிராத்து மூலம் (வச. 14-18) விநியோகித்தது. பவுல் அப்போஸ்தலரின் ஊழியத்திற்காக பிலிப்பிய திருச்சபை தொடர்ந்து ஜெபத்தில் தரித்திருந்திருக்கக் கூடும் (1:19).

இந்த பண்டைய திருச்சபை விசுவாசிகள் ஒன்றாக இணைந்து ஊழியம் செய்ததற்கான எடுத்துக்காட்டுகள் இன்று நம்மை ஊக்குவிக்கும். தேவன் நம்மை வழிநடத்தி, நமக்கு அதிகாரம் கொடுத்ததால், ஜெபிக்கவும் மற்றவர்களுக்கு ஊழியம்செய்யவும், சக விசுவாசிகளுடன் ஒத்துழைக்கவும், நம்மால் இயன்றதைவிட அதிகமாக செய்யமுடிகிறது. “தனித்து வேலை செய்தால் நாம் ஒரு துளி, ஆனால் இணைந்து வேலை செய்தால் நாம் சமுத்திரம்.”